அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பக்தர்கள் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.
உலக முழுவதும் உள்ள ராம பக்தர்கள் மட்டுமின்றி இந்துக்களுக்கு மறக்க முடியாத நாளாக நேற்றைய தினம் அமைந்தது. 500 ஆண்டுகள் கனவு நிறைவேறியுள்ளது என மக்கள் மகிச்சியில் உள்ளனர். வனவாசம் சென்ற ராமர் பல காலங்களுக்கு பிறகு மீண்டும் அயோத்திக்கு வந்துவிட்டார் என பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பிரதமர் மோடி, முக்கிய விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளாமானோர் நேற்று அயோத்தியில் ராமரை பார்க்க குவிந்தனர். அதன்படி, கோயில் கருவறையில் பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு, முதல் நபராக பிரதமர் மோடி வழிபட்டார். இதன்பின் பல்வேறு முக்கிய தலைவர்கள் ஸ்ரீ ராம பகவானுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
பெரும் சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலில், இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வருகை புரிந்து, நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.