சிவகங்கையில் வழக்கமாக வீட்டு உரிமையாளர் சாவி வைக்கும் இடத்தை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பருத்தி கண்மாய் கிராமத்தில் செபஸ்தியன் என்பவர் வீட்டில் 30 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் பணத்தை திட்டமிட்டு திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னை தெரசா நகரில் வசிப்பவர் செபஸ்தியன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தும், சத்துணவு அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். பத்திர பதிவிற்காக காளையார்கோவில் சென்ற போது அவரது வீட்டை நோட்டமிட்டு, வழக்கமாக சாவி வைக்கும் இடத்தை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பிரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
வீடு திறந்து கிடப்பதையும், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாரி, டி.எஸ்.பி பால் பாண்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டனர். சாவியை நோட்டமிட்டு எடுத்து, பூட்டை லாவகமாக திறந்து மொத்தத்தையும் ஆட்டையைப் போட்டுச் சென்ற திருட்டு கும்பல் பற்றிய இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.