தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 46க்கு விற்ற நிலையில் தற்போது சில்லறை சந்தையில் கிலோ 55 முதல் 60 வரை விற்பனை ஆகி வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் கிலோ 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் திருச்சி மாவட்டங்களில் உள்ள சாகுபடி மையங்களில் நெல் வரத்து குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் இம்முறை விவசாயிகள் இரண்டாவது போக நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி சரிந்தது. இதன் காரணமாகவும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய வியாபாரி ஒருவர் கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை 20 சதவீதத்திற்கு அதிகமாக அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.