சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து அழகு குத்தி சிறிய தேர் இழுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து மரத்தேரில் முருகன் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தேர் வீதி உலா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திருவேடகம் ஏடகநாதசுவாமி கோவில் முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பரசுராம பட்டர் முருகனுக்கு பால், தயிர்,பஞ்சாமிர்தம் உள்பட 21 அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்தார். முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காலையிலும் மாலையிலும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், செயல்அலுவலர் இந்துமதி, உபயதாரர் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை முருகன் வள்ளி தெய்வானை வீதி உலா நடந்தது. சோழவந்தான் அருகே ஆறுமுகம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு முருகனுக்கு 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில், சிதம்பர விநாயகர் கோவில் ஆகிய கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கினர்.




