சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி அதி விமர்சியாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான கயர்குத்து விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அக்னிசட்டிஎடுத்து, கயிர்குத்தி, முடி காணிக்கையுடன்- முத்துகாணிக்கையும் செலுத்தி, மாவிளக்கு எடுத்து, தவழும் பிள்ளையுடன், எண்ணற்ற வடிவமைப்பில் களிமண்ணால் உருவாக்கி வண்ணங்கள் தீட்டப்பட்ட உருவங்களுடன், பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி, அருள் கூட்டுகின்ற செயல்கள் பல புரிந்து, அம்மனை வணங்கி வழிபட்டனர்.
அன்றைய தினம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினர்களும் தங்களது உடம்பில் கரும்புள்ளி- செம்புள்ளி குத்தி, பல்வேறு வேடங்கள் தரித்து கைகளில் வேப்பிலை ஏந்தி, மாரியம்மன் பாடல்கள் பாடியபடி படையெடுத்து வந்து, கோவிலை சுற்றி வலம் வந்த பின்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மீண்டு, நோய் நொடியின்றி வாழ வேப்பிலை படுக்கையில் உருண் டெழுந்தனர். தொடர்ந்து திருவிழா நடைபெற்று வரும் நிலையில், வருகிற10- ம் தேதி புதன்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.