• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

லால்குடியில் அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா

Byகதிரவன்

Mar 23, 2024

திருத்துவத்துறை எனும் லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா மார்ச் 7-ம் தேதி விக்னேஸ்வரா பூஜையுடன் தேர்க்கால் ஊன்றும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 ந்தேதி தேரோட்ட கொடியேற்ற விழா நடைபெற்றது. விழாவில் தினமும் சுவாமி அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில், முதல் தேரில் அருள்மிகு விநாயகர், 2-வது தேரில் அருள்மிகு சுப்பிரமணியர் ஆகியோர் திருவீதி உலா வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, மிகப் பழமையான பெரிய தேரில் அருள்மிகு சோமாஸ்கந்தர் சுவாமியும், 4-வது தேரில் அருள்மிகு பெருந்திரு பிராட்டியார் அம்மனும், 5-வது தேரில் அருள்மிகு சண்டிகேசுவரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய தேரோடும் வீதிகளில் செல்லும் தேர்கள், இன்று மாலை நிலையை அடையும்.

தேரோடத்தில் லால்குடி, நன்னிமங்கலம், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம், இடையாற்றுமங்கலம், திருமங்கலம், ஆங்கரை, மணக்கால் உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட கிராம்மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்யா , மற்றும் கோயில் பணியாளர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.