பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் மார்ச் 20-ம் தேதி ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய ஏதுவாகப் படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் மார்ச் 20, 2026 அன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இந்த இடைவெளியில் ரோப் காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள், கம்பி வடம் மற்றும் உருளைகள் உள்ளிட்ட முக்கியப் பாகங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், மறுநாள் முதல் ரோப் கார் சேவை மீண்டும் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்தைத் தவிர்க்க மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.



