• Mon. May 6th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 20, 2023

ஒரு ஏழை விவசாயி அவன் மனைவி பிள்ளைகளுடன் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தான்.

போதுமான மழை இல்லாத காரணத்தினாலும், நிலத்தில் விளைச்சல் இல்லாததனாலும், தன் மனைவியையும் இரண்டு பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உணவிற்காக மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகிறான்..

ஒரு ஏழை விவசாயி வறுமையின் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்ணுவதால் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் ஆனான்..

ஒருநாள் தன்னுடைய நிலத்தை பார்த்துக்கொண்டே சோகத்தில் கன்னத்தில் கை வைத்து அழுது கண்ணீர் வடித்தான்..

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு ரிஷியை கண்டான். அவரிடம் ஓடி சென்று விழுந்து கும்பிட்டு “சாமி நீங்கள் எனக்காக ஒரு உதவி செய்யவேண்டும் என்றான்.

“கேளுங்கள் என்ன உதவி..!”என்று ரிஷி சொல்ல “நீங்களோ கடவுளுக்கு மிகவும் பிடித்தவர். உங்களது உலகமே கடவுள் மட்டும்தான். ஆனால் நானோ ஒரு விவசாயி. என்னுடைய கடவுள் இந்த நிலம்தான்! இப்போது என் வாழ்க்கையில்  உணவு பற்றாக்குறையால் நானும் என் மனைவி மக்களும் வறுமையில் வாடுகிறோம்”! என்று அவன் கூறி அழுதான்.

“சரிப்பா! அதற்கு நான் என்ன செய்யமுடியும்!” என்று ரிஷி கேட்க “நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து என் வாழ்நாள் முடியும் வரை எனக்கு எவ்வளவு உணவு கிடைக்குமோ அவ்வளவு உணவையும் இன்றே! இப்போழுதே! தருமாறு கேளுங்கள் என்றான்”

இதை கேட்ட ரிஷி வித்தியாசமானவன் நீ!

சரி உன் ஆசை போல ஆகட்டும் என்று அந்த நிலத்திலேயே அமர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்..

வீட்டிற்கு சென்று பார்! இந்த ஜென்மத்தில் உனக்கு எவ்வளவு உணவு கிடைக்குமோ அவ்வளவு உணவும் உன் வீட்டில் இருக்கும் என்றார்.

அதன்படி வேகமாக வீட்டிற்கு ஓடியவன் தன் மனைவி மக்களின் முகத்தில் எல்லையில்லா சந்தோஷத்தை பார்த்தான். அவன் வீடு முழுவதும் உணவுகளாய் நிரம்பி வழிந்தது.. எண்ணற்ற காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை.. என்று பார்க்கும் இடமெல்லாம் உணவுகளாய் நிறைந்து இருந்தது..

மாதங்கள் பல ஓட.. மறுபடியும் அதே வழியில் அந்த ரிஷி வருகையில் இந்த இடத்தில் ஒரு விவசாயிக்கு பிரார்த்தனை செய்தோமே!

அவன் எப்படி இருக்கிறான்..! என்ன ஆனான்..! எல்லா உணவையும் பாதுகாத்தானா..? என்ன செய்தான்..!என்று நினைத்து சுற்றும் முற்றும் விவசாயியை தேட அவன் வீட்டிலிருந்து உணவு பொட்டலங்களை மக்கள் எடுத்து செல்வதை கண்டார்..

ஆகா.. அதை அவன் தர்மம் அல்லவா செய்கிறான்!

அவன் வாழ்நாள் உணவு இன்னுமா தீரவில்லை.. என்ன இது அதிசயம்.

என்று வியந்த ரிஷி கடவுளிடம் மறுபடியும் பிரார்த்தனை செய்து.. கடவுளை நேரில் கண்டு இதற்கான அர்த்தத்தை கேட்க கடவுள் சொல்கிறார்..

“ரிஷியே! நீங்கள் அந்த விவசாயின் வறுமையை கண்டு என்னிடம் பிரார்த்தனை செய்தீர்கள்! நானும் அந்த பிரார்த்தனையை ஏற்று அவனுக்கு அவன் வாழ்நாள் உணவை கொடுத்தேன்..

அவன் அதை வைத்துக்கொண்டு என்ன செய்தான் தெரியுமா! தனக்கு கிடைத்த உணவு பொருட்களை அவனை போல வறுமையில் வாடும் ஏழை விவசாயிகளுக்கு கொடுத்து வந்தான்!

அவர்களின் வாழ்த்துகள் தான் அவனை இன்னமும் வாழ வைக்கிறது! அவன் நிறுத்தும் வரை நானும் நிறுத்தமாட்டேன்! இந்த கணக்கு எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது.. என்றார் கடவுள்..

இறைக்கின்ற_கிணறுதான்_சுரக்கும் | ஒரு ஏழை விவசாயி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *