வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி. நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாணியம்பாடி நகராட்சிக்குப்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அகமது என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.