வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் ஸ்பாஞ்ச் சிட்டி கட்டமைப்பு (Sponge City Construction) முறையை அமல்படுத்த கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மொத்தம் 39,000 நீர் நிலைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 50 % நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.பெரும்பாலான கண்மாய்கள் முறையாக சர்வே செய்யப்படுவதில்லை. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டிடங்களை கட்டி உள்ளது. இதன் காரணமாகவே மழை காலங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது என குறிப்பிட்டிருந்தார்.
சீனா போன்ற நாடுகளில் ஸ்பாஞ்ச் சிட்டி மழை நீர் முறை (Sponge City Rainwater System) எனும் பெயரில் மழை நீரை முறையாக சேமிப்பது, அதற்கான வடிகால் திட்டத்தை முறையாக அமைப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறினார்.
அதிக வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் ஸ்பாஞ்ச் சிட்டி கட்டமைப்பு (Sponge City Construction) முறையை அமல்படுத்தவும், 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பட்டா வழங்கிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ” இது மிகப்பெரிய திட்டம். இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?” என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர்.