ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிடும் நவாஸ் கனி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தில் பேசியது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை திரித்து தவறாக சமூக வலைதளங்களில் பரப்புவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞரும், தேர்தல் தலைமை முகவருமான சந்திரசேகரன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவருமான திரு. பா.விஷ்ணு சந்திரன் மற்றும் தொகுதி தேர்தல் பார்வையாளர் திரு. பண்டாரி யாதவ் ஆகியோரிடம் தொலைபேசியின் வாயிலாகவும் புகார் மனு அளித்துள்ளார். ராமர் கும்பாபிஷேகத்திற்கு வருகை தராமல் ராமரை காங்கிரஸ் இழிவு படுத்தியதாக வந்த செய்தியை, ராமநாதபுரம் ராவணன் பூமியாக மாறிவிட்டதால் அங்கு நான் போட்டியிடவில்லை என தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் நவாஸ் கனி ஆதரவாளர்கள் பதிவிட்டு வந்துள்ளனர். இது ராமநாதபுரம் வாக்காளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அவர்களை தோற்கடிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பும் நவாஸ் கனி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்திரசேகரன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.