ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே தேவர் தங்க கவசம் கொடுக்கப்போவதில்லை என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அதிரடியாக கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? என தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார். மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின் போது அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார். தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் அதிமுக சார்பில் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இது குறித்து தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் கூறும் போது இபிஎஸ் ஆதரவாளர்கள் என்னிடம் வந்து பேசியுள்ளார்கள். ஓபிஎஸ் தரப்பிலிருந்து யாரும் ஏதுவும் கேட்கவில்லை. எங்களுக்கு இருவருமே தேவை. இந்த சண்டை எல்லாம் வேண்டாம். இதனால் நானே அதை வங்கியில் இருந்து பெற்று அதன்பின் மீண்டும் நானே வங்கியில் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.