8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது அதனை வேண்டும் என்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதுகுறித்து விழாவில் அவர் பேசியதாவது:- அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க.வின் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் திகழ்ந்தது. நாம் பெற்ற பிள்ளைகளுக்கு தற்போது தி.மு.க. அரசு பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வந்தபோது தி.மு.க.வினர் அதை எதிர்த்தனர். தி.மு.க. ஆட்சியில்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு
திருவண்ணாமலையில் போராட்டமே நடத்தினார். அவர்களது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்த விவசாயிகளை தூண்டி விட்டார்கள். ஆனால் தற்போது 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று அதனை எதிர்த்தவர்கள் கூறுகிறார்கள். நான் கொண்டு வந்தால் தவறு என்றார்கள், அவர்கள் கொண்டு வந்தால் சரி என்கிறார்கள். உலகத்தரத்திற்கு இணையாக பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி போராடி பெறப்பட்டது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் வேண்டும் என்றே எதிர்ப்பு தெரிவிப்பது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது தான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.