• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பெரியாறு அணையின் நீர்மட்டம் திறப்பு..,

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணிக்கு 136 அடியானது. “ரூல் கர்வ்” அட்டவனை முறைப்படி ஜூலை 10 வரை அணையில் 136 அடி தண்ணீரை மட்டுமே நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்பதால், உபரி நீரை திறப்பது குறித்து தேக்கடியில் உள்ள தமிழக நீர்வளத்துறை அலுவலகம் மூலமாக, நேற்று முன்தினம் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆரம்ப எச்சரிக்கை (initial warning) மற்றும் உபரி நீர் திறப்பு குறித்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

இரவு நேரங்களில் உபரி நீர் திறப்பதை தவிர்க்குமாறு தமிழக நீர்வளத் துறையை கேரள அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தபடியால், இரவு 10 மணிக்கு மேல் உபரி நீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று மதியம் 12.00 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 136.25 அடியை எட்டிய நிலையில், “ரூல் கர்வ்” அட்டவனை முறைப்படி நீர்மட்டத்தை 136 அடியாக நிலை நிறுத்தும் வகையில், அணையின் 13 மதகுகளும் 10. செ.மீ. உயர்த்தப்பட்டு, கேரள பகுதிக்கு வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வரை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உபரிநீர் திறப்பு நிகழ்ச்சியில், பெரியார் அணை கம்பம் சிறப்பு கோட்ட அலுவலக செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன் குமார் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளும், அணை காவல் பணியில் உள்ள கேரள போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கேரளா அதிகாரிகள் கூறுகையில், அணையிலிருந்து அதிக அளவில் நீர் திறக்கப்படும் சூழல் ஏற்படும் பட்சத்தில், கேரளா பகுதியான வல்லக்கடவு, பீர்மேடு, சப்பாத்து, ஐயப்பன் கோயில் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். மேலும் இப்பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்பு துறையினர், நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றனர்.