• Mon. May 20th, 2024

மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Byவிஷா

May 10, 2024

வைகாசி மாத பூஜைக்காக மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
வரும் 15-ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை நடை பெறுகிறது.
வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வரும் 19-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *