மதுரை பாத்திமா கல்லூரி அருகே காலையில் திறந்து வைக்கப்பட்ட திமுக கட்சியின் பெயர் பலகை மாலை மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மதுரை மத்திய தொகுதி 8-வார்டு உட்பட்ட பகுதியில் பாத்திமா கல்லூரி அருகே திமுக சார்பில் “தளபதி.மு.க. ஸ்டாலின்” ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த திமுக ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையினை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்துடைய கணவரும் மதுரை 1ம் பகுதி செயலாளருமான பொன்வசந்த் காலையில் திறந்து வைத்தார். அதன் பிறகு நேற்றைய தினம் மதுரையில் அமைச்சர் தலைமையில் ஆனையூரில் முத்தரையர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கப்பதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்திருந்தார்.
அப்போது பாத்திமா கல்லூரி அருகே அவருக்கும் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரிடம் திமுக ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகைக்கு மாலை அணிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காரில் இருந்தபடியே திமுகவினர் கொடுத்த சால்வை , மாலை மரியாதையை பெற்றுக்கொண்டு சென்று விட்டார். முத்தரையரின் விழா மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. விழா முடிந்த சில மணி நேரத்தில் பாத்திமா கல்லூரி அருகே வைக்கபட்டிருந்த திமுக ஆட்டோ பெயர் பலகை சில மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
காலையில் திறப்புவிழா கண்டு மாலையில் திமுக இளைஞரணி செயலாளர் பார்வையிட்ட பெயர் பலகை சில மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.