கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உலா வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் ரோந்து பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு சமயங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விடுகின்றன.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் தடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊருக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டிகள் உட்பட எட்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்துள்ளது. ஊருக்குள் வந்த யானைகள் சாலையோரம் இருந்த சில செடிகளை பிடுங்கி திண்று விட்டு சென்றுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. புத்தாண்டின் முதல் நாளே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் இந்த ஆண்டாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பல நாட்களாக மலையடிவாரம் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அகழி வெட்டி காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் வனத்துறையினர் விரைந்து அகழி வெட்டி இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே நஞ்சுண்டாபுரம் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருட்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.