சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25ம்தேதி நடைபெறுகிறது என இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வெங்கடேசப் பெருமாள் கருட சேவைக்கு, தமிழ்நாட்டு பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்ய உள்ளது.
சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 25-ந்தேதி காலை 10 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. 30-ந்தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். இதுகுறித்த விவரங்களுக்கு 7373099562, 7373099545 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.