மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதப்புரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், பொதுபோக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நேற்று (டிச.17) பேருந்துகள் இயக்கப்படவில்லை. சேவை நிறுத்தப்பட்டதால் ஒரே நாளில் 200- க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வைகை ஆற்றின் பிறப்பிடமான மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் 44.2 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 43 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, வெள்ள நிவாரண மீட்புப் பணிகளுக்காக திருச்சியில் இருந்து 250 தூய்மைப் பணியாளர்கள் நெல்லைக்கு வந்துள்ளனர்.