இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 7 வயது சிறுமிக்கு உறுதியாகி உள்ளதாக தெலங்கானா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் காரணத்தால், இந்தியாவில் அரசு தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலத்தில், 3 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மூவரில், 7 வயது சிறுமியும் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
மற்ற இருவரும் கென்யா மற்றும் சோமாலியா நாட்டில் இருந்து வந்த பயணிகள். இவர்கள் இருவரும், இந்திய அரசு பட்டியலிடாத நாடுகளில் இருந்து ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்ட அச்சிறுமி, துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் ஹைதராபாத் விமான நிலையம் வந்து – பின் அங்கிருந்து மேற்கு வங்கத்துக்கு பயனப்பட்டுள்ளார். அப்போது சோதனை நடத்தியதிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஒமைக்ரான் உறுதியான சூழலிலும், குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது தற்போதைக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
தற்போது மேற்குவங்கத்திலுள்ள அச்சிறுமியை கண்காணிக்குமாறும், குழந்தையுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யுமாறு தெலங்கானா அரசு மேற்குவங்க அரசை அறிவுறுத்தியுள்ளது.