கோவையில் ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சையின் 20ஆம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது.
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை கடந்த 20 ஆண்டுகளாக ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரிவின் 20 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் அவர் ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு மற்றும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மற்றும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் பிரவீன் ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டுக்கும் மருந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கும் நவீன ‘ஓபிசிட்டி கியூர், டயாபீடிஸ் கியூர்’ என்ற மையங்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து டாக்டர்.பழனிவேலு எழுதிய “உடல் பருமன் – சந்தேகங்கள், தீர்வுகள்” புத்தகத்தின் 2ம் பதிப்பை வெளியிட்டார்.
டாக்டர் பழனிவேலு அவர்கள் பேசுகையில்..,
இப்புத்தகம் உடல் பருமன் மற்றும் எடை குறைப்பு முறைகளை பற்றி மக்களிடையே உள்ள பலவிதமான சந்தேகங்களை தீர்க்கும் நோக்கில் எழுதப்பட்டது எனவும், உடல் பருமனை பொறுத்தவரை அனைவரும் மருத்துவர்களாக இருப்பதாகவும் அதனால் மக்களுக்கு உடல் பருமனை பற்றிய அறிவியல் சார்ந்த உண்மைகளை எடுத்துரைப்ப தற்காக இப்புத்தகம் எழுதப்பட்டதாகவும் கூறினார்.
இத்துறையின் தலைவர் டாக்டர் பிரவீன் ராஜ் அவர்கள் பேசும் போது..,
உடல் பருமனை முழுமையாக அறிவியல் முறைப்படி குணப்படுத்துவதற்காக இப்பிரிவு துவங்கப் பட்டுள்ளதாக கூறினார்.மேலும் இது சர்க்கரை நோயை அறிவியல் முறைப்படி கட்டுப் படுத்துவதற்காக உடல் கூறுகளை ஆராய்ந்து உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் நோக்கில் இந்த சிகிச்சை முறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். உடல் பருமன் சந்தேகங்களும் தீர்வுகளும் என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு அமைச்சர் அவர்களாய் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 2009 ஆம் ஆண்டு வெற்றிகரமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசியதாவது:
உடல் பருமன் அதிக உணவு உண்ணுதாலால் அல்லது குறைவான உடல் உழைப்பு காரணமாக ஏற்படுவதல்ல என்பதை இம்மருத்துவமனை மருத்துவர் பிரவீன் ராஜ் தெளிவாக கூறியுள்ளார் .சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம், எடை மேலாண்மை உள்ளிட்டவை நீரிழிவு நோயின் முக்கிய காரணிகளாகும். எனக்கும் இந்த நோயின் பாதிப்பு உள்ளது. நான் தினமும் சுமார் 10 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகவே நான் 76 கிலோ எடையிலேயே இருக்கிறேன். தமிழத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். கோவையில் ரேஸ்கோர்ஸ் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. நடப்பதால் பல்வேறு பலன்கள் உள்ளன. இது ஓரளவுக்கு எடையை குறைக்கும். மருத்துவர் பழனிவேல் எடைகுறைப்புக்கான அறுவை சிகிச்சையை இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கினார். இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து பல்வேறு சிகிச்சைகளையும், மருத்துவர்களுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஜெம் மருத்துவமனையின் சேவை அரசு மருத்துவமனைக்கும் தொடர வேண்டும். அதற்கான ஒப்பந்தம் செய்ய முன்வர வேண்டும். அரசு அதாவது மருத்துவமனையிலும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும்.அரசு மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பின் மூலமாக ரூ.90 கோடி மதிப்பில் ஈரோட்டில் புற்று நோய் மையம் உருவாகி வருகிறது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் கேன்சர் ரோபோட்டிக் எக்யூப்மெண்ட் என்ற அதி நவீன இயந்தியம் வாங்கி பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் பொருத்தி ஏழை மக்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்கி வருகிறோம்.முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கே முன்னுதாரணமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை ஒரு மருத்துவ நகரமாக விளங்கி வருகிறது. வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் சரவணகுமார், சி.ஓ.ஓ பார்த்த சாரதி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.