சினிமா கதாநாயகர்கள் யாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது என திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சாமி தோப்பில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது.., வெள்ளித்திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் ஜொலித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ரை போன்று ஆந்திராவில் என்.டி. ஆர் என்ற இரு பெரும் ஆளுகைகள் மட்டுமே. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், மலையாள திரை உலகில் பிரேம் நசீர் அவர்கள் கண்ட அரசியல் இயக்கத்தை ஆட்சி கட்டிலில் அமர்ந்த முடியவில்லை. திமுக தலைவர்களாக விளங்கிய அண்ணா, கருணாநிதி ஆகியோரை முதல்வராக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு என்பது வரலாறு. சினிமாவில் இருந்து கொண்டு தனது தொண்டுள்ளத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். எனவே, சினிமா கதாநாயகர்கள் யாரும் எம்.ஜி.ஆராகி விட முடியாது. என்.டி.ஆர் ஆகிவிடமுடியாது என்பது காலம் சுட்டி காட்டியுள்ள உண்மை.
விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா.? என்பதை எங்கள் பொதுச்செயலர் முடிவு செய்வார். இப்பிரச்சினையில் முதலில் ஆவேசம் காட்டிய திருமாவளவன் தற்போது திமுக தலைவரிடம் சரணடைந்து விட்டார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாரதியஜனதாவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டார். பாரதிய ஜனதா கட்சி நாம்தமிழர் மற்றும் நோட்டாவுடன் மட்டுமே போட்டிப் போட தகுதியாக உள்ளது. பாஜகவின் வாக்குவங்கி வரும் தேர்தலிகளில் மிகவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகம் என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எட்டவே முடியாத கனி.

பாஜக தற்போது திமுகவுடன் இணக்கம் காட்டி வருகிறது. மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுதற்கு முன்புவரை ஒன்றிய அரசு என விமர்சனம் செய்து விட்டு தற்போது மத்திய அரசு என சொல்வது வேடிக்கையாக உள்ளது.
திமுகவில் அண்மை காலமாக மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் மூத்த, முன்னணி தலைவர்கள் மிகுந்த அதிருப்தியுடன் உள்ளனர். திமுகவில் இருந்து சில கூட்டணி கட்சிகள் வெளியேறுவது உறுதி. எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரிய அளவில் கூட்டணி அமைக்கும். இத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.
திமுக அரசு மீது மக்கள் உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர். ரேசன் பொருள்கள் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு பிரச்சினை ஆகியவற்றில் பொதுமக்கள் நம்பிக்கையை திமுக இழந்து விட்டது. சசிகலா அதிமுகவை இணைப்பேன் என கூறிவருவதை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்வில்லை.
சினிமா நடிகைகள் தங்களை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறுவது காலம் கடந்த குற்றச்சாட்டாக உள்ளது. குற்றம் நடந்த உடனே தெரிவிப்பதை விட்டுவிட்டு 10 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். சுடச்சுட குற்றச்சாட்டுகள் வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும் என்றார்.

அதிமுக தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளர், திரைப்படம் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வெளிப்படுத்திய முக பாவங்கள் ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குநர் அவர் என்பதை வெளிப்படுத்தியது.





