தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளே வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான தீர்மானம், அரியலூர் பட்டாசு அலை விபத்து தொடர்பான விவாதம், 39 இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான விவாதம் என பரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்கள் போலவே இன்றும் தொகுதி வாரியாக அந்தந்த தொகுதி பிரச்சனைகள் மற்றும் பொது பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் தகுந்த பதிலை அளித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை தொகுதி திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சட்டப்பேரவையில், புதுக்கோட்டையில் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள சாலைகளை நான்கு வழிசாலைகளாக மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் கூறிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், மாநில அரசு சார்பில் போடப்படும் 7மீ சாலைகள் 10மீ சாலைகளாக மாற்றப்பட்டு அதில் மத்திய அரசு டோல்கேட் வைத்து வசூல் செய்து வருகின்றன. தற்போது மாநில அரசு சார்பில் 4 வழிச்சாலையாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் மாநில நெடுஞ்சாலைகளை, 10 மீ அகலமுள்ள 4 வழிச்சாலைகளாக மாற்றி அதில் உள்ள சுங்க சாவடிகளை நீக்கி விடலாம். இதுகுறித்து நாட்டில் உள்ள சுங்க சாவடிகளே வேண்டாம் என மத்திய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதி வருகிறோம் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.