நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்து வருகிறது. பலமாதங்களுக்குப் பிறகு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து தனது ஊழியர்களை இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு ஊழியர்களை டிசிஎஸ் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது. நவம்பர் மாதத்திற்குப் பிறகு டிசிஎஸ் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பணியாளரும் பணிக்காக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். 95 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பகுதியளவு தடுப்பூசியும், 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசியும் போடப்பட்டிருப்பதால், நிறுவனம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கிறது என்றும் கூறப்படுகிறது. தற்போது, நிறுவனத்தில் சுமார் 20 முதல் 25 சதவீத ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.