• Fri. Apr 26th, 2024

அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை- இபிஎஸ் பேட்டி

ByA.Tamilselvan

Apr 27, 2023

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிப் பழனிச்சாமி பேசும் போது.., எங்களுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அப்படி கருத்து வேறுபாடு இருந்தால் அவர் எப்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வார்?. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் உள்ளது. அது வரும் மக்களவைத் தேர்தலிலும் தொடரும். ஊடகங்களில் தேவையில்லாத விவதாங்களைத் தவிர்க்கத்தான் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்க்கும் படி கூறினேன். மேலும் கூட்டணியில் இருந்தாலும், அனைவரும் அவர்களின் கட்சிகளை வளர்க்கத்தான் நினைப்பார்கள். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் 10 ஆண்டு காலமாக அவர்களுடன் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் இப்போது தான் அத்தி பூத்தது போல, “ 12 மணி நேர வேலை சட்டத்திருத்தத்தினை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்”.
தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்பாக வெளியான ஆடியோ அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆடியோ குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த ஆடியோ அமைச்சரவையில் உள்ள தியாகராஜன் பேசியுள்ளார். ஆனால் இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து வாய் திறக்கவில்லை. மேலும், அந்த ஆடியோவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 30ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை நாங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என கூறினார்.
மேலும், “ கொடநாடு விவகாரம் நடைபெற்றது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான். நடவடிக்கை எடுக்கப்பட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான். குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக ஆட்சிக்காலத்தில் தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கு நடத்தியது அதிமுக. கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் நடைபெறவில்லை. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என முதலமைச்சர் கூறிதற்கு சட்டமன்றத்தில் நேருக்கு நேர் நான் பதில் அளித்தேன்”.
ஒரு சிலரைத் தவிர யாரை வேண்டுமானாலும் அதிமுகவில் இணைப்போம். ஓ. பன்னீர் செல்வம் மாநாடு நடத்துகிறார் என்றால் அது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும். அது குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அந்த பேட்டியில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *