புதிய சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணிகளை சபாநாயகர் செல்வம் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் கொறுக்குமேடு பகுதி காந்திநகர் மற்றும் வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 47.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் வசதி பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார்.

மணவெளி சட்டமன்றத் தொகுதி கொருக்கமேடு பகுதியில் உள்ள காந்தி நகர், வ உ சி நகர் ஆகிய பகுதிகளில் கழிவு நீர், வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் உள்ள மக்கள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை தலைவருமான செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 39.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கொருக்கமேடு காந்தி நகர், வ. உ. சி நகர் ஆகிய பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கும், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் பகுதியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் அரசாணை பெற்று தந்தார்.

இதன்படி இப்பணிகளை துவங்கும் வகையில் பணிகளுக்கான பூமி பூஜை சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் அகிலன் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், சக்திவேல் மணி, சகாயராஜ் உள்ளிட்ட அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







