புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக சேலம் மாநகர காவல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி பயன்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக தனியார் கல்லூரியுடன் சேர்ந்து சேலம் மாநகர காவல் துறை சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பயன்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி இன்று தொடங்கி வைத்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் சேலத்தில் தங்கி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் எந்த முகவரியில் வசித்து வந்தவர்கள், தற்போது சேலத்தில் எந்த முகவரியில் வசித்து, பணியாற்றி வருகிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் வட மாநிலத்தவர் பாதுகாப்பாக உள்ளார்களா? இல்லையா? என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இந்த செயலி மூலமாக பதிவு செய்து உதவியை பெறலாம் என்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தெரிவித்தார்.