உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது.
இந்நிகழ்ச்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் ஒரு மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து , பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு என பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவை முன்னிட்டு கொலுசாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்பும் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரமும், நாளை கோலாட்ட அலங்காரமும், நாளை மறுநாள் மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 29ஆம் தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30ஆம் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும் ,ஒன்றாம் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், இரண்டாம் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், மூன்றாம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், நான்காம் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று நவராத்திரி உற்சவம் தொடங்கும் நிலையில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனை, கல்ப பூஜை, சகஸ்ர நாம பூஜை ஆகியவை நடைபெறுகிறது.