கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபசரித்து மத நல்லிணக்கம் பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோனியம்மன் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஒப்பணக்கார வீதி வழியே பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாகவும் வருவர். அதே வீதி வழியாக தேறும் வடம் பிடித்து இழுத்து வரப்படும். இந்த நிலையில் உச்சி வெயிலில் தீச்சட்டி எடுத்தும் கரகம் எடுத்தும் வந்த பக்தர்களுக்கு ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள மசூதியைச் சேர்ந்த அத்தர் ஜமாத் – ஐ சேர்ந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர்.


சிலருக்கு நேரடியாக அவர்களே வாயில் தண்ணீர் ஊற்றி பருக வைத்த நெகிழ்ச்சி சம்பவமும் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் கோனியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழாவின் போது இந்த மத நல்லிணக்கத்தை பேணி கடைபிடிக்கின்றனர். அதுமட்டுமின்றி தேரோட்டம் நடைபெறும் நாளில் அவ்வழியே வரும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் பேருந்துகளில் செல்போருக்கும் தண்ணீர் வழங்கி உபசரித்தனர்.


