சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக் கருவிகளை வாசித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசைக் கலைஞர்கள் மனு அளித்துள்ளனர்.

போதிய வேலைவாய்ப்பிலாமல் அவதியுறும் தங்களுக்கு இலவச வீட்டுமனை , பேருந்து கட்டணத்தில் 100 சதவீதம் சலுகை,கலைஞர்கள் வாழும் ஊரில் உள்ள கோவில்களில் நிரந்தர வேலை, இசைக் கலைஞர்களுக்கு இலவசமாக வாத்திய கருவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
மனு அளிக்க வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தவில் மற்றும் நாதஸ்வரம் இசைக்கருவிகளை இசைத்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேசிய இச்சங்கத்தை சார்ந்தவர்கள், போதிய வருமானம் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர். மாத சம்பளம் வருவது போன்று அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் மாத சம்பளத்தில் இசை கலைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு கூடுதலான இசைக்கருவிகளை வழங்க வேண்டும் என்றும் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது கலைஞர்களுக்கு வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய பல்வேறு விசேஷங்களுக்கும் கேரள மாநில இசையான செண்டை மேளம் ஆகியவற்றை பயன்படுத்துவது தான் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்துள்ள அவர்கள், அதனால் தமிழ் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பாதிப்படைவதாக தெரிவித்தனர்.