தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் 45. இவர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தர்ம சாக்ரா என்ற பிரிவில் தேனி மாவட்ட செயலாளராக உள்ளார். கம்பம்- கூடலூர் இடையே ஆயில் கடை நடத்தி வரும் இவர், இன்று (ஜன.7) காலை 8 மணிக்கு வழக்கம் போல் கடையை திறக்க டூ வீலரில் சென்றார். கடை அருகே ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் ரவிக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ரவிக்குமார் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர் மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்தில் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். பதட்டத்தை தணிக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொலை வெறித் தாக்குதல் தொடர்பாக கம்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.