தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்த் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வது தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின் தாய் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் ரஜினி கூறுகையில், “அருணா ஜெகதீசன் அறிக்கை கசிந்தது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் வன்மையாகக் கண்டிக்கிறோம், ஜெயக்குமார் சமூக பொறுப்பற்ற தன்மையுடன் பேசி வருகிறார்.வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டின் போது பயங்கரவாத அமைப்பு புகுந்துள்ளதாக கூறி, துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்தை வன்மையாக கண்டிக்கிறோம்.அருணா ஜெகதீசன் அறிக்கையில், ‘பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்றார்.