சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்றார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக, ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று வந்தடைந்தார். அதன் அடிப்படையில் அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.