கோவை – கேரள எல்லையான கே.ஜி. சாவடி பகுதியில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நடுரோட்டில் தென்னை மட்டையை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிச் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கோவை கந்தே கவுண்டன் சாவடி (எ) கே.ஜி. சாவடி சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ஒரு முக்கியப் பகுதியாகும். நேற்று இரவு அந்தப் பகுதியில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர், சாலையோரம் கிடந்த காய்ந்த தென்னை மட்டையை எடுத்துக் கொண்டு திடீரெனச் சாலையின் நடுவே நின்றார்.
“நான் தன்னந்தனி ஆளு… தில் இருந்தா போதும்” எனப் பஞ்ச் வசனங்களைப் பேசியபடி, கையில் இருந்த தென்னை மட்டையை கிரிக்கெட் பேட் போலச் சுழற்றி பேட்டிங் செய்யத் தொடங்கினார்.
சாலையில் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மறிப்பது போல அவர் பேட்டிங் செய்ததால், விபத்து ஏதும் ஏற்பட்டுவிடுமோ ? என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓரமாக மெதுவாக ஓட்டிச் சென்றனர்.
இதைப் பார்த்த அங்கிருந்த மளிகைக் கடையில் நின்றிருந்த ஒருவர், தனது செல்போனில் இந்த ‘நகைச்சுவை’ காட்சியைப் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு, “வீரன் உள்ளே இறங்கியதால் கிரிக்கெட் வீரனாக மாறிய நபர்”, “ஐ.பி.எல் ஃபீவர் இவரை இப்படி மாத்திருச்சு போல”, எனப் பல்வேறு வேடிக்கையான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மது போதையில் அவர் செய்த இந்த அலப்பறை அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பையும், பெரும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது.




