பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க கடந்த 1999 பிப்ரவரி 21-ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட, யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 2000- ம் ஆண்டு முதல் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், உலகத் தாய்மொழி தினத்தை கொண்டாடும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!” என பதிவிட்டுள்ளார்.