• Tue. Sep 26th, 2023

அரசு அருங்காட்சியகத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு…

ByNeethi Mani

Aug 4, 2023

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம் அருகே  கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  முன்னிலையில்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் பேசுகையில்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை நேரடியாக பார்வையிட்டு, உலக புகழ் வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் கோவில் ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெறக் கூடிய  அகழாய்வுப் பணிகள்  கோவிலின் உடைய முக்கியத்துவம், குறிப்பாக சோழ வேந்தர்களில் மாமன்னன் இராஜேந்திர சோழனுடைய பெருமையை பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தரத்திலான ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அருங்காட்சியகம்   கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் அருகில் உள்ள இடத்தினையும், குருவாலப்பர்கோவில் அருகே உள்ள மற்றொரு இடத்தினையும் நேரடியாக ஆய்வு செய்ததில். இந்த இரண்டு இடங்களில் எந்த இடம் மிகவும் சிறப்பாக இருக்கும், அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பதை முடிவு செய்து பணிகள் துவங்கப்படும்.

தமிழக  முதலமைச்சர்  நேரடியாக ஆய்வு செய்யக்கூடிய தனித்துவமான திட்டங்களில் வரக்கூடிய ஒன்றாகும். இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி மிக விரைவில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களை கவரக்கூடிய வகையில், சிறந்த முறையில், உலகத் தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமைய வேண்டும்.இது சோழர்களின் புகழை குறிப்பாக இராஜேந்திர சோழனுடைய புகழை பறைசாற்றும் வகையிலும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் அமையவேண்டும்   இன்று தமிழக முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார். தொடர்ந்து மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து  அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பார்வையிட்டு பொருட்களின் விவரம் குறித்து கேட்டறிந்து,  அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட மதில்சுவருக்கு நிறுத்தப்பட்டதாக கருதப்படும் 7 மீ நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூணினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அருங்காட்சியக ஆணையர் அரவிந்த், எம்எல்ஏக்கள்  கண்ணன்,சின்னப்பா, அகழாய்வு பணிகள் இணை இயக்குநர் (சென்னை) சிவானந்தம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (கடலூர்) பரணிதரன், அகழாய்வு பணிகள் இயக்குநர் பிரபாகரன், துணை இயக்குநர் பாக்கியலெட்சுமி, ஆர்.டி.ஓ பரிமளம், சுற்றுலா அலுவலர் நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *