கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்காக 202 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் பட்ஜெட் மூலம் அந்தந்த துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர.ராமச்சந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது நெல் வாழை மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிப்புகள் குறித்து இன்று நாகர்கோவிலில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்னர் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசியதாவது..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நிரந்தரமாக தடுப்பதற்காக கடந்த முறை பாதிப்பு ஏற்பட்ட போது ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் சார்பில் திட்டங்கள் அனுப்பப்பட்ட வகையில் மழை பாதிப்புகளை தடுப்பதற்காக 202 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்தந்த துறைகள் மூலம் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மின் துறைக்கு 152 கோடி ரூபாயும், பொதுப்பணித்துறைக்கு 33 கோடி ரூபாயும் , நெடுஞ்சாலை களுக்கு 27 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் இழப்பீடு வழங்கவேண்டும் நான்கு மாதத்திற்கு பின்னர் இழப்பீடு வழங்குவதால் எந்த பயனும் இல்லை அதனால் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மாவட்டத்தில் பேரிடர் வந்த பிறகு செயல்படாமல் வரும்முன் காக்கும் வகையில் தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறிய அவர் குமரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளையும் அதற்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த காலத்தில் வெள்ளத்தின் போது மின்வெட்டு பாதிப்புகளை சரி செய்ய 10 நாட்கள்வரை ஆன நிலையில் தற்போது மின்வெட்டு சரி செய்யும் பணிகளை 2 நாட்களில் முடித்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் குத்தகை விவசாயிகள் தான் அதிகளவில் பயிர் இடுவதாக கூறப்படுகிறது எனவே அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து கடிதம் பெற்றுக் கொடுத்தால் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.