ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அந்தியூர் வந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் தனது ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் இரவில் தங்கினார்.இதனைத் தொடர்ந்து தாமரை கரையிலிருந்து ஈரெட்டி, எழுச்சிபாளையம் வரை 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் தேவர் மாலை பகுதிக்கு சென்று அங்குள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
தனது ஆய்வின் போது பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம், தாமரைக்கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு அதன் தொடர்ச்சியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையினை ஆய்வு செய்தார்.