சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள 4 வீடுகள் தரைமட்டமாகின.
இந்நிலையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சிலிண்டர் வெடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது: “வீட்டில் வணிக நிறுவன பயன்பாட்டு சிலிண்டரை பயன்படுத்தி பலகாரங்கள் செய்தபோது, சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் வீடுகள் சேதமாகி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பின்றி வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பாக ஆய்வு செய்து, முறையான பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அவைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கத்தக்கதாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து குறித்து, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.