சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 24 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சூது பவளமணி, சில்லுவட்டுகள், வட்ட சில்லுகள், தீப விளக்குகள், அரிய வகை செப்புக்காசுகள், மண்பாண்ட பொருட்கள், அயல்நாட்டு வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட முத்திரைகள், உட்பட நான்காயிரத்து நூறுக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் கூடுதலாக சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் கிடைத்துள்ளது. இது சுமார் 87 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளது.

மற்றொன்று இரும்பு கிடைத்த நிலையில் முதல் முறையாக ஈயம் கிடைத்துள்ளது. இது சுமார் 102 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளது. ஈயத்தை எடை கற்களாக பயன்படுத்திருக்கலாம். பதக்கத்தை பார்க்கும்போது, பண்டைய கால தமிழர்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் கலைப் பொருட்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர்.

அதற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






