கொரோனா பெரும் தொற்றின் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் மதுரை மக்களால் 90% முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு ஜனவரி 31 வரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு எனவும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் எனவும் அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று துவங்கிய இப் பொதுமுடக்கம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையாக இன்றும் மதுரை மக்களால் 90% முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் நடைபெற்று வரும் நிலையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் ஜனவரி 17 க்கு தமிழக அரசு ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அவசியமின்றி வெளியே வரும் நபர்களை காவல்துறை விசாரித்து திரும்ப அனுப்பி வருகிறது அதுபோன்று பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை எச்சரித்தும் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. பெரும்பாலான சாலைகள் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.