• Mon. May 6th, 2024

கிரிக்கெட் ஸ்டேடியம் போல் காட்சியளிக்கும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்..!

Byவிஷா

Dec 7, 2023

மதுரை மாவட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானம், கிரிக்கெட் ஸ்டேடியம் போல் பிரம்மாண்டமாக உள்ளது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுவது சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேலாக இந்த பணிகள் நிறைவடைந்துள்ளது. சுமார் 14 ஏக்கரில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி, தொடர்ந்து நிறைவு பெற்றுவருகிறது. தற்போது கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 3,700 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மூன்று அடுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளரை, மாடுபிடி வீரர்கள் உடை மற்றும் உணவு வழங்கப்படும் அறை, மாடுகளுக்கான கொட்டகை, மழை நீர் வடிகால், செயற்கை நீரூற்று, ப்புல் தரைகள், அலங்கார செடிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் சமயத்தை தவிர மற்ற சமயங்களில் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக 22 கோடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் 10 மீட்டர் புதிய தார்சாலையும் அமைக்க நெடுச்சாலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த சாலை பணியானதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த மாதம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிந்து ஜனவரி முதல்வாரத்தில் திறக்கப்படும் எனவும் பொங்கல் விழாவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை பகுதி மக்கள் தெரிவித்ததாவது..,
“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி எங்கள் கிராமத்தில் நடைபெறுவது எங்களுக்கு பெருமையான ஒன்று. தற்போது கட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போல பிரமாண்டமாக உள்ளது. இதனால் எங்கள் பகுதி வளர்ச்சியடையும். இந்த மைதானத்தில் ஏகப்பட்ட பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் ஜல்லிக்கட்டை காண முடியும்” என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *