நற்றிணைப் பாடல் 163:
உயிர்த்தன வாகுக அளிய நாளும்
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையடு
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்துமன் அளிய தாமே பெருங் கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: நெய்தல்
பொருள்:
அவன் தாழை மணக்கும் கானல் துறையின் தலைவன். பெருங்கடல் பகுதியில் நீல நிறப் புன்னையும், தாழையும் பூத்துக் கிடக்கும் துறை அது. அவன் ஏறிவரும் குதிரை மூச்சு வாங்கட்டும். ஊதைக் காற்று வீசுகிறது. நீர்த் திவலைகளை (அயிர்த் துகள்) முகந்துகொண்டு வீசுகிறது. அமைதி கொள்ளாமல் (ஆனா) வீசுகிறது. பகல் (எல்லி) இரவு என்று எண்ணாமல் வீசுகிறது. குதிரைக்குக் கட்டிய சலங்கை (இனமணி) இசையுடன் ஒலிக்கிறது. நிலா வெளிச்சம் தவழும் மணல் மேட்டில் ஏறி இறங்கிக் குதிரை செல்கிறது. அதனால் மூச்சு வாங்குகிறது. வாங்கட்டும். என் நெஞ்சம் போல மூச்சு வாங்கி வருந்தட்டும். அந்தக் குதிரை இரங்கத் தக்கது. அப்படி அது மூச்சு வாங்கும்போது, ஞாயிறு காயும் வெயில் போல் சூடு பறக்கிறது.