• Fri. Apr 19th, 2024

ரூ.1000 கோடியை தாண்டும் மதுவிற்பனை?

ByA.Tamilselvan

Jan 17, 2023

பொங்கல் விடுமுறையை யொட்டி 3 நாட்களில் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று காணும் பொங்கல் முன்னிட்டு ரூ1000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து அதிகரித்தது. பொங்கல் பண்டிகை மது விற்பனை கடந்த வாரம் 13-ந்தேதி தொடங்கி விட்டன. இறுதி நாளான அன்றும் அதை தொடர்ந்து வந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் எதிர்பார்த்த அளவை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கத்தை விட 3 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது. வழக்கமாக தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடியை தாண்டி இருக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும், வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும் மதுபாட்டில்கள் விற்பனை நடந்து இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலானவர்கள் அதற்கு முதல் நாளே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இந்த நிலையில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.1000 கோடியை தாண்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *