கேரளாவில், சாலைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, அதில் ஒரு பெண்ணின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷபி, பகவத் சிங், லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நரபலி வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
செப்டம்பர் 26-ம் தேதி பத்மா காணாமல் போன நாள் முதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பத்தனம்திட்டாவில் உள்ள லைலா சிங்கின் வீட்டை நோக்கி பத்மா சென்றதும், இதனையடுத்து லைலா சிங் வீட்டுக்குள் பத்மா செல்வது தெரியவந்ததாக விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவும், ரோஸ்லினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரின் நிலை இதுவரை மர்மமாகவே இருக்கிறது.
எனவே, அந்த 12 பெண்களையும் முகமது ஷபி நரபலி கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாக கருதும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.