இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர் உட்பட, 13 மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையிலிருந்து சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள், நேற்று புதன்கிழமை இரவு இலங்கையில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், சென்னை வந்தனர்.
இந்த மீனவர்களில், காரைக்காலைச் சேர்ந்த செந்தமிழ் என்ற மீனவருக்கு, இலங்கை கடற்படையின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள எம் ஜி எம் தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மற்ற 12 மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மீனவர்கள் 3, நாகை பட்டினம் மீனவர்கள் 4, காரைக்கால் மீனவர்கள் 6, மொத்தம் 13 மீனவர்கள், கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி மாலை, 2 விசைப்படகுகளில், கடலுக்கு சென்று இந்திய கடல் எல்லையில், மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அன்று நள்ளிரவில் இலங்கை கடலோர காவல் படை கப்பல் வந்து, தமிழக மீனவர்களின் 2 விசைப்படகுகளையும், சுற்றி வளைத்தனர். அதோடு எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, 13 மீனவர்களையும் கைது செய்து,2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை மிரட்டும் விதத்தில், அவர்களை துப்பாக்கியால் சுட்டதில், காரைக்காலை சேர்ந்த செந்தமிழ் (27) என்ற மீனவருக்கு வலது காலில் துப்பாக்கி குண்டுகளை பாய்ந்து, காயமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்பு மீனவர்களையும், படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். காயம் அடைந்த செந்தமிழ் என்ற மீனவர், இலங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும், இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதற்கு இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், 13 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து, அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் 13 மீனவர்களையும், விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கைகள் எடுத்தனர். மீனவர்கள் 13 பேருக்கும், பாஸ்போர்ட்கள் இல்லாததால், தூதரக அதிகாரிகள் மீனவர்களுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். அதோடு 13 மீனவர்களுக்கும், விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளையும் செய்தனர்.
அதன் பின்பு நேற்று புதன்கிழமைஇரவு, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 13 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், 13 மீனவர்களையும் வரவேற்றனர். அதோடு துப்பாக்கிக்கும் குண்டால் காயம் அடைந்த காரைக்கால் மீனவர் செந்தமிழ் என்பவரை, சென்னை தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதற்காக, ஆம்புலன்ஸ் வசதியும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து வைத்திருந்தனர். அதன்படி முதலில் வலது காலில் துப்பாக்கிக் கொண்டு காயமடைந்த செந்தமிழ், வெளியில் அழைத்துவரப்பட்டு, ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, சென்னை அமிஞ்சிகரையில்
உள்ள எம் ஜி எம் தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன்பின்பு மற்ற 12 மீனவர்கள் வெளியில் வந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், 12 மீனவர்களும், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு குண்டு காயத்துடன், காரைக்கால் மீனவர் ஒருவர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.