கன்னியாகுமரியில் ரயில்வே ஊழியர் ரயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன் (54). இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை 10:30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்பகுதியில் ரோந்து சென்ற ரயில்வே போலீசார் ரயிலின் ஜன்னல் கம்பியில் ஒருவர் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் கன்னியாகுமரி சேர்ந்த ரயில்வே ஊழியர் சாமிநாதன் என்பது தெரிய வந்தது. அவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக அவர் பணிக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் ரயிலில் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு சென்றது.