கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வன்முறையான போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதால் அமைதிக்காக, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டு, மறுஉடற்கூறாய்வுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் மாணவியின் தந்தை தங்கள் தரப்பு மருத்துவர்களை அனுமதிக்க மேல் முறையீடு செய்தார். அப்படி இல்லையெனில் இன்று நடக்கும் உடற்கூறாய்வுக்கு தடை கேட்டிருந்தார். அதை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் இல்லாமலேயே உடற்கூராய்வை நடத்தலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் தற்போது மாணவியின் உடலுக்கு உடர்கூராய்வு நடத்தப்படுகிறது. மேலும், மறு உடற்கூராய்வு தொடர்பாக, மாணவியின் வீட்டுச் சுவரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.