ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வர். இந்த நிலையில் மண்டல மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 27ம் மண்டல பூஜை நடைபெற்றது நடை சாத்தப்பட்டது.
புத்தாண்டையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை முதல் ஏராளமானோர் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், டிஐஜி தாம்சன் ஜோஸ், சன்னிதானம் சிறப்பு அதிகாரி ஆர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனை அடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, நிர்மால்ய பூஜையுடன், 18,018 தேங்காய்களில் நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.
தலைமை அர்ச்சகர் பி.என்.மகேஷ் நம்பூதிரி தலைமையில், தந்திரி (தலைமை அர்ச்சகர்) கண்டரரு மகேஷ் மோகனரரு மேற்பார்வையில் நெய்யபிஷேகம் நடைபெற்றது.
ஆனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பக்தர்களின் வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காலை 8 மணியிலிருந்து எரிமேலியில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்காததால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. இதனை அடுத்து அங்குள்ள பக்தர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டு கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டிக்கிறோம் என கோசமிட்டனர். இதனால் எரிமேலி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேன் மற்றும் காரில் வந்த போது, எருமேலியில் இருந்து பம்பைக்கு கேரளா வாகனங்களை மட்டும் அனுமதிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் தமிழ்நாட்டு எண் கொண்ட வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று மாலை 3 மணி அளவில் அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு போலீசார் அனுமதித்தனர் என மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஆட்டோ மணி கூறினார்.