சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கண்டித்து கன்னியாகுமரி ராஜீவ் காந்தி சிலை அமைந்துள்ள ரவுண்டான பகுதியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் தலைமையில் குமரி மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரிக்கு வந்துள்ள வெளி மாநில சுற்றுலா பயணிகள் போராட்டம் நடப்பதை பார்த்ததும்.எவரும் அழைக்காமலே வெளி மாநிலத்தவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் மொழியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.